மருதுார் பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை
புவனகிரி: மருதுார் நடு நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.புவனகிரி அடுத்த மருதுார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்றுபகுதி கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் எட்டாம் வகுப்பு முடித்த நிலையில் உயர் நிலை கல்விக்காக வெளியூர் செல்லும் சூழல் உள்ளது.முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் பலரின் உயர்கல்வி தடைபடுகிறது. எனவே, மருதுார் சுற்றுப் பகுதி மாணவர்கள் நலனை கருதி, மருதுாரில் இயங்கும் நடு நிலைப்பள்ளியை, உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.