தீ விபத்து: நகை, பணம் எரிந்து சேதம்
திருக்கனுார்: பிடாரிப்பட்டில் மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீபிடித்து எரிந்ததில் 10 சவரன் நகை, ரொக்கப்பணம் எரிந்து சேதமடைந்தன.திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான பிடாரிப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவராஜ், 43; தனியார் நிறுவன ஊழியர். இவரது, குடிசை வீடு நேற்று மதியம் 2:30 மணி அளவில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்தது. இதைகண்ட குடும்பத்தினர் வெளியே ஓடிவந்து, திருக்கனுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். திருக்கனுார் தீயணைப்பு நிலைய வாகனம், பி.எஸ்.பாளையத்தில் வீட்டின் மீது விழுந்த மரக்கிளைகளை அகற்ற சென்றிருந்தது. அதனால் விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதற்குள், வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால், வீட்டின் அருகே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், வந்த விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள், விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான 10 சவரன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.