உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மழையால் வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி பாதிப்பு

 மழையால் வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி பாதிப்பு

பரங்கிப்பேட்டை: கனமழை காரணமாக, வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோரத்தில் சாமியார்பேட்டை, புதுக்குப்பம், சி.புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னுார், கிள்ளை, முடசல் ஓடை, கூழையார், பட்டரையடி உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்கள் பிடிக்க, படகில் கடலுக்கு சென்று, மீன் பிடித்துவிட்டு பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் கிள்ளை முடசல் ஓடை மீன்பிடி இறங்கு தளத்திற்கு கொண்டு வருகின்றனர். அங்கிருந்து, உள்ளூர் மீன் வியாபாரிகள் மூலம் வஞ்சனம், கொடுவா, மத்தி, அகிலா, சூரை, சுங்கான்,கவலை, கனவா, இறால் உள்ளிட்டவைகளை கனரக வாகனங்கள் மூலம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு தினமும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக நாட்டு படகுகள், கட்டுமரங்கள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர, 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த, 3 நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்கள் விசைப்படகுகள், மோட்டார் படகுகளை கிள்ளை முடசல் ஓடை மீன் பிடி இறங்குதளம் மற்றும் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீன் வலைகளை,வலை பின்னும் கூடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் மீன் ஏற்றுமதி செய்யப்படாததால், எப்போதும் பிசியாக காணப்படும் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை மீன் பிடி இறங்கு தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !