ரூ.10 லட்சம் மதிப்பில் சில்வர் கடற்கரையில் அங்காடி துவக்கம்
கடலுார்: கடலுார் சில்வர் கடற்கரையில் மதி அங்காடியினை கலெக்டர் திறந்து வைத்தார். கடலுார், தேவனாம்பட்டிணம் சில்வர் கடற்கரையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதி அங்காடி கட்டப்பட்டுள்ளது. இந்த அங்காடியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், துணைமேயர் தாமரைச்செல்வன் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசியதாவது: அரசு மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை மேம்படுத்துவதற்கான பல்வேறு புதுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த மதி அங்காடி சுற்றுலா பயணிகளுக்கு தரமான, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி தயாரிப்புகளை நியாயமான விலையில் விற்பனை செய்திடும் பிரத்யேக இடமாக செயல்படும். இந்த முயற்சி, கிராமப்புற பெண்களின் நிலையான வாழ்வாதாரத்தையும் வளர்க்கிறது. அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கிராமப்புற உற்பத்தியாளர்களுக்கும், நகர்ப்புற நுகர்வோருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதையும், கிராமப்புற தொழில்முனைவோரை ஊக்குவிப்பதையும், தமிழ்நாட்டின் கலாசார மற்றும் கைவினைப் பாரம்பரியத்தை கொண்டாடுவதை மேம்படுத்திடவும் அங்காடி அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய இந்த கடற்கரையில் மதி அங்காடியினை நடத்துவதற்கு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயனுள்ள வகையில் கொண்டு செல்ல குழுவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜெய்சங்கர், மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, ஆராமுது உட்பட பலர் கலந்து கொண்டனர்.