| ADDED : பிப் 04, 2024 04:53 AM
கடலுார் : 'மாணவர்களின் எதிர்பார்க்க முடியாத எதிர்காலத்தை ஆசிரியர்கள் நிர்ணயிக்க முடியும்' என, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவன புதுச்சேரி மண்டல விற்பனை மேலாளர் அரவிந்த் பேசினார். கடலுாரில், 'தினமலர்' நாளிதழ் நடத்திய ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில் அவர் பேசியது:ஆசிரியர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். நான் நான்காம் வகுப்பு படித்தபோது, மேடை ஏறி பேச உற்சாகப்படுத்தியது ஒரு ஆசிரியை. என் திறமையை வெளியில் கொண்டு வந்த முதல் ஆசிரியை அவர். அதனால், தான் நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மத்தியில் என்னால பேச முடிகிறது.என் வளர்ச்சிக்கு நான் படித்த பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம். அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஒரே சக்தி ஆசிரியர்கள் தான். ஆசிரியர் பணி மிகவும் சிரமம். ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர்கள், வீட்டில் குழந்தைகள், குடும்பத்தாரை சமாளிக்க வேண்டும்.மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பது ஆசிரியர்கள். மாணவர்கள் எதிர்பார்க்க முடியாத எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். டி.வி.எஸ்., நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு வசதிகளுடன் வாகனங்கள் தயாரித்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.