| ADDED : நவ 19, 2025 06:03 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட சுனாமி குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த, 2004 டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை உருவானது. இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம் உட்பட பல்வேறு மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஏராளமான குடியிருப்புகள், படகுகள், மீன்பிடி வலைகள் சேதமாகின. சுனாமியால் கடற்கரையோர கிராம மக்கள் தமது வீடுகளை இழந்து நிற்கதியாய் நின்றனர். இதை பார்த்து, சர்வதேச அளவில், 200க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் கடலுார் மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறு பகுதிகளில் அவர்களுக்கு உதவினர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவ்வாறு மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட சுனாமி குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக, வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இது தொடர்பாக, மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர் வாழ்வுரிமை இயக்கம் அறிவித்தது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது . மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனர் ஏகாம்பரம் தலைமையில், நிர்வாகிகள், மீனவர்கள் நேற்று காலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து தாசில்தார் மகேஷ் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதனையேற்று, மீனவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், 'இதுவரை பல முறை மனு அளித்தும் பட்டா வழங்கவில்லை. இனியும், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஆயிரக்கணக்கான மீனவ மக்களை திரட்டி கடலுாரில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், ' என்றனர்.