| ADDED : ஏப் 23, 2024 04:03 AM
தர்மபுரி: குடிநீர் வினியோகம் தொடர்பாக, துறை சார்ந்த அலுவலர்களுடனான, ஆய்வு கூட்டம் நேற்று, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில் கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசுகையில்,''கிராம பஞ்.,களில் குடிநீர் வினியோகம் குறித்து எவ்வித புகாருமின்றி, சீராக வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீரை குடிக்க, சமைக்க மட்டும் பயன்படுத்த வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் கசிவு தடுக்க அனைத்து பஞ்., செயலாளர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், அனைத்து துணை பி.டி.ஓ.,க்கள் ஆய்வுக்கூட்டம் நடத்தி, ஊரக பகுதிகளில் முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து, துண்டிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல், கண்காணிக்க வேண்டும். மின் மோட்டார்களில் பழுது அல்லது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டால், உடனுக்குடன் அதை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,'' என்றார்.இதில், கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் ரவிக்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.