செயல்பாட்டிற்கு வந்த அரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்
அரூர், நவ. 12- தர்மபுரி மாவட்டம், அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா கடந்த மாதம், 24ல் நடந்தது. பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்த போதிலும், பஸ் ஸ்டாண்டில் மின் இணைப்பு வழங்காதது, புறக்காவல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நேர அலுவலகம் அமைத்தல் உள்ளிட்ட சில பணிகள் முடிவடையாத காரணத்தினால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. தொடர்ந்து, வர்ணதீர்த்தம் முதல், பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதி சாலையின் ஒரு பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த, 5ல் அரூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நவ., 11 முதல், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும் என, தாசில்தார் ராதாகிருஷ்ணன், அரூர் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, பஸ் ஸ்டாண்டில் நடைமேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று முதல் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்டிலுள்ள, 53 கடைகளுக்கு பொது ஏலம் விடப்படாததால் பூட்டப்பட்டுள்ளன.