அரூர், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீது, தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், 2,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.மலைக்கோவில் அடிவாரத்திலுள்ள, 2 மற்றும், 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான குத்தகை ஏலம், நேற்று காலை, 11:00 மணிக்கு, பொய்யப்பட்டியில் உள்ள தீர்த்தமலை பஞ்., அலுவலகத்தில், அரூர் துணை பி.டி.ஓ., ரமணி முன்னிலையில் துவங்கியது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ஒரு லட்சம் ரூபாய் வங்கி டி.டி., செலுத்த நிபந்தனை விதிக்கப்பட்டது. ஏலத்தில் பங்கேற்க, 19 பேர் டி.டி., வழங்கினர். அதில், 3 பேர் அரூர் நகரை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளக்கூடாது, தீர்த்தமலை பஞ்.,ஐ, சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க, தீர்த்தமலை பஞ்.,ஐ சேர்ந்தவர்கள் கூறினர். மேலும், ஏலத்தில் பங்கேற்க டி.டி., வழங்கிய அரூரை சேர்ந்த நபர்களிடம், அதை வாபஸ் பெறக்கூறினர். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதத்தால் சலசலப்பு ஏற்பட்டது. பின், 2:45 மணிக்கு, அரூரை சேர்ந்தவர்கள் டி.டி.,ஐ திரும்ப பெற்றனர். இதையடுத்து, மதியம், 3:00 மணிக்கு நடந்த ஏலத்தில், தீர்த்தமலையை சேர்ந்த கவிதா ராயப்பன் என்பவர், ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். அரூர் டி.எஸ்.பி., சதீஸ்குமார் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.