உள்ளூர் வாகனங்களுக்கு இலவச பாஸ் கோரி எச்.புதுப்பட்டியில் டோல்கேட் முற்றுகை
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டி, அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் கடந்த மாதம், 21ல் திறக்கப்பட்டது. நேற்று அதை, 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். டோல்கேட் நிர்வாகிகளிடம் பொதுமக்கள், பல கோரிக்கைகளை வைத்தனர். அதில், சுற்றுவட்டாரத்தில், 20 கி.மீ.,க்குள் இருக்கும் தொழில் சாரா வாகனங்கள், சொந்த உபயோக வாகனங்கள் எனப்படும் ஒயிட் போர்டு வாகனங்களுக்கு, மாதம், 350 ரூபாய் கட்டணம் நிர்ணக்கப்பட்டுள்ளது. அதை இலவச பாஸாக வழங்க வேண்டும். அல்லது மிக குறைந்த விலையில் வழங்க வேண்டும். அதேபோல், 5 கி.மீ., சுற்றளவுக்குள் உள்ள தொழில் சார்ந்த உள்ளூர் சரக்கு வாடகை வாகனங்களுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும். விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும், விவசாய பொருட்களை அறுவடை செய்யும் இயந்திரங்களுக்கும் கட்டணத்தில் சலுகை வேண்டும். டோல்கேட் அருகே உள்ள பள்ளி, கல்லுாரி பஸ்களுக்கு குறைந்தபட்ச தொகையில் பாஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து, தனியார் நிறுவனம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய கவனத்திற்கு கொண்டு செல்வதாக, டோல்கேட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.