| ADDED : ஜூலை 14, 2011 09:07 PM
பழநி : பழநி பாலாறு மணல் குவாரியில் கூடுதல் 'வசூலை'க் கண்டித்து, லாரி டிரைவர்கள் வாகனங்களை வழியில் நிறுத்தி 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். பழநி பகுதியில் வரதமாநதி, பாலாறு அணை, குதிரையாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள், அரசு அனுமதிக்காக சில மாதங்களாக மூடப்பட்டிருந்தன. வெளிமாவட்டங்களில் இருந்து அதிகபட்சமாக, யூனிட் ஒன்றிற்கு 6000 ரூபாய் வரை செலவிட வேண்டிய சூழல் உருவானது. பெரும்பாலான அரசு, தனியார் கட்டட பணிகள் முடங்கியுள்ளன. நேற்று முதல், பாலாறு மணல் குவாரி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இப்பகுதியில் மணல் எடுக்க, பொதுப்பணித்துறை சார்பில் யூனிட் ஒன்றிற்கு 313 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க., பிரமுகர்களான சிவகுருநாதன், ஆயக்குடி சேக்பாரூக் தலைமையில் சிலர், இப்பகுதியில் நேற்று காலை முகாமிட்டு காத்திருந்தனர். மணல் எடுத்து வந்த டிப்பர் லாரி, டிராக்டர்களில், கூடுதல் கட்டணமாக 1000 ரூபாய் வரை வசூலித்துள்ளனர். இதை கண்டித்து, மணல் எடுத்து வந்த 25 லாரி டிரைவர்கள் வாகனங்களை வழியில் நிறுத்தி, வக்கீல் தினேஷ் தலைமையில் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ''மணல் எடுப்பதில் முன்னுரிமை கேட்டு பிரச்னை செய்தனர். கூடுதல் வசூல் பிரச்னை குறித்து விசாரணை நடக்கிறது,'' என்றார்.