| ADDED : ஜூலை 21, 2024 05:22 AM
வேடசந்துார்: திண்டுக்கல் கரூர் மாவட்டங்களின் எல்லை பகுதியாக உள்ளது ரங்கமலை கணவாய் பகுதி. இந்த வழியாகத்தான் திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு மாவட்ட எல்லையில் இடச்சியாயி கோயில் உள்ளது. வேடசந்துார் அடுத்துள்ள கல்வார்பட்டி அருகே நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இக்கோயிலில் சுவாமியை தரிசித்து விட்டு ரோட்டில் சிதறு தேங்காய் உடைத்து செல்வது வழக்கம். சிதறு தேங்காயை உண்பதற்காக ரங்கமலை பகுதி குரங்குகள் தினமும் வந்து செல்வது வாடிக்கை.இப்படி வந்து செல்லும் குரங்குகள் வறட்சி காலத்தில் போதிய உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்தது. நெடுஞ்சாலையில் செல்லும் பலரும் குரங்குகளின் பரிதாப நிலை கருதி குரங்குகளுக்கு உணவு பொட்டலங்களை குறிப்பாக வாழைப்பழம், முறுக்கு, நிலக்கடலை உள்ளிட்ட தின்பண்டங்களை வீசி செல்வது வாடிக்கையாக உள்ளது. இதேபோல் அரவக்குறிச்சியில் இருந்து வார சந்தைகளுக்கு வாழைப்பழங்களை வாகனத்தில் ஏற்றி வருவோரும் மனம் உவந்து பழங்களை வழங்குவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில் சிவ பக்தரான கூம்பூரை சேர்ந்த டீக்கடை பழனிச்சாமி ஆஞ்சநேய பக்தராக மாறிய நிலையில் ரங்கமலை கணவாய் பகுதி வாழ் குரங்குகளுக்கு அங்கே ஓர் தண்ணீர் தொட்டி அமைத்து தினமும் தண்ணீர் ஊற்றுகிறார். தனது சொந்த செலவிலும், கடைக்காரர்களிடம் மீதமான பலகாரங்கள், பழங்களை வாங்கி வந்து வழங்குகிறார்.கூம்பூர் டீக்கடை பழனிச்சாமி கூறியதாவது:நான் ஆஞ்சநேய பக்தன். வறட்சி காலத்தில் இங்குள்ள குரங்குகள் குடிக்க தண்ணீர் இன்றி, உணவின்றி அவதிப்பட்டதால் சில ஆண்டுகளாகவே இந்த பணியை செய்து வருகிறேன் என்றார்.