| ADDED : ஜூலை 03, 2024 05:47 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் கார்த்திகை நட்சத்திர நாளை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், ரயிலடி சித்தி விநாயகர் கோயில் முருகன் சன்னிதி . என்.ஜி.ஓ. காலனி முருகன் கோயில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.நத்தம்: -சாணார்பட்டி திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுப்ரமணிய சுவாமி, முருகப்பெருமானுக்கு 21 வகை அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்ய முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதன் பின் லட்சார்ச்சனை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.காமாட்சி மவுனகுரு மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் அறக்காவலர் அழகுலிங்கம் செய்திருந்தார்.நத்தம் :அசோக் நகர் பகவதி அம்மன் கோயிலில் உள்ள வெற்றிவேல் முருகன் சன்னிதியில் முருகனுக்கு ராஜா அலங்காரம் செய்ய சிறப்பு பூஜைகள் ,தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வேம்பார்பட்டி பாலமுருகன் கோயிலில் ் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.பழநி : ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.இதையொட்டி சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு ,அதன்பின் தங்கரத புறப்பாடு நடந்தது. அதிகளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருஆவினன்குடி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை ,பஜன், விளக்குப் பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.