| ADDED : ஏப் 10, 2024 05:34 AM
கோபால்பட்டி : சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் பங்குனி அமாவாசையான நேற்று நடந்த பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தை சபையின் நிர்வாகி திரு வேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.இதையொட்டி நேற்று காலை முதல் சபையில் வளர்க்கப்படும் 50க்கு மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை, உணவுகள் வழங்க கோ பூஜை நடந்தது.தொடர்ந்துமாலையில் மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்க பிரத்தியங்கிரா தேவி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.தொடர்ந்து சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாகுண்டத்தில் மூடை மூடையாக மிளகாய் வத்தலை கொட்ட உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி யாகம் நடந்தது. மதுரை,தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை பனை ஓலையில் எழுதி யாக குண்டத்தில் போட்டு பூஜை செய்தனர். வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் மூலமாக பூஜையில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.