திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 9 மாத ஆண் குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அப்பனம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது 9 மாத ஆண் குழந்தைக்கு பிறவியிலே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை ஏற்பட்டது. குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சேர்த்தனர். பரிசோதித்த கண்பார்வை பிரிவு டாக்டர்கள் லென்ஸ் பொருத்தலாமா என ஆலோசித்தனர். 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் லென்ஸ் பொருத்தமுடியும் என்பதால் முதலில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்தனர். இதை தொடர்ந்து குழந்தைக்கு கண் பார்வை கிடைத்தது. 1 மாதம் பின் இடது கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். இரு ஆண்டுக்கு பின் லென்ஸ் பொருத்த திட்டமிட்டுள்ளனர். அறுவை சிகிச்சை குழுவில் உள்ள டாக்டர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் பாராட்டினர்.