பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பழநி:பழநி முருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று பக்தர்கள் குவிந்த நிலையில் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.இக்கோயிலுக்கு வர பக்தர்கள் பேட்டரி கார், பஸ்சுகாக கிரிவீதியிலும், வின்சில் செல்லவும் பல மணி நேரம் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு வின்ச் வரிசையில் முன்னுரிமை வழங்கப்பட்டது. பின்னர் பொது, கட்டணவரிசையில் தரிசிக்க 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. மற்ற நாட்களை விட இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இங்கு 2025ம் ஆண்டுக்கான முருகன் ராஜா அலங்கார காலண்டர் 15000 அச்சடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட சில மணி நேரத்தில் அனைத்தும் விற்று தீர்ந்தன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஒரு வழிப்பாதை அறிவித்து குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைந்து கோயில் செல்லவும், இறங்கி வர படிப்பாதையை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.பழநி கிரிவீதியில் அலகு குத்தி காவடி எடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர். பாதயாத்திரை பக்தர்களும் அதிகமாக வந்தனர். மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்தவர்கள் அலகு குத்தி பறவை காவடி எடுத்தும், கோச்சடையைச் சேர்ந்தவர்கள் 30 அடி வேல் அலகு குத்தி வந்தனர். வாகன நெரிசல்
திருஆவினன்குடி, அருள்ஜோதி வீதி பகுதிகளில் முறையாக வாகன நிறுத்தும் வசதிகள் இல்லாததால் சாலையில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி சென்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதுபோல் மதனபுரம் செல்லும் பாதை என முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.