| ADDED : ஏப் 01, 2024 05:40 AM
லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் 24 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நிலைகண்காணிப்புக்குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பறக்கும் படைகள் வாகன சோதனையில் ஈடுபடும் போது ஒரு தலைபட்சமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக முக்கிய புள்ளிகள், கட்சிகள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் வெறுமன கண்துடைப்பிற்காக பெயரளவில் சோதனை செய்யப்படுகிறது. பல இடங்களில் அந்த சோதனையும் நடப்பதில்லை. ஆனால் வணிகர்கள், அப்பாவி மக்களிடம் முழு வீரத்தையும் காட்டி ஒரு ரூபாய் அதிகமாக இருந்தால் கூட பறிமுதல் செய்கின்றனர்.அலைபேசி விற்று பணத்தை எடுத்துச் செல்பவர், கல்யாணத்திற்காக செல்வோர், அரிசி போன்ற உணவுப் பொருட்கள், புடவை கொண்டு செல்வோரிடம் பில், ரசீது கேட்டு பறிமுதல் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு வணிகர் வழக்கமாக நிலுவை வைத்து பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் தவணை முறையில் கொண்டு செல்வார். அதற்கு ரசீது கிடையாது. அதனை பறிமுதல் செய்து விடுகின்றனர். எடுத்துக் கூறினாலும் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அரசியல் கட்சிகளின் பணமோ, பொருட்களோ இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை. எல்லாம் கண்துடைப்பு நாடகமாகவே உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு பாரபட்சமின்றி செயல்பட அறிவுறுத்த வேண்டும்.