மழையில் அரசு பள்ளி கூரை இடிந்து விழுந்தது
சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வி.டி.பட்டி ஊராட்சியிலுள்ள அரசு ஆரம்பப்பள்ளியில், 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, நான்கு வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. இதில், இரண்டு வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் இரண்டு கட்டடங்களின் கூரை சேதமடைந்து, மழை பெய்யும் போது தண்ணீர் வகுப்பறைக்குள் விழுகிறது.மழை நீரால் மாணவர்கள் உட்காரும் பெஞ்ச், மேஜை, கல்வி சாதனங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் இந்த வகுப்புகளில் உள்ள மாணவர்கள் மற்ற வகுப்பறையில் உட்கார வைக்கப்படுகின்றனர்.இந்நிலையில், மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் பள்ளி கூரை இடிந்து வகுப்பறைக்குள் விழுந்தது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இனியும் காலம் தாழ்த்தாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வகுப்பறை கட்டடங்களை சீரமைத்து, மாணவர்கள் சிரமமின்றி கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.