திண்டுக்கல் : திண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டிலுள்ள வன்னியபாறைபாறை பட்டி பகுதியை சுற்றிய சிறுமலை நீரோடை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் கேள்விகுறியாகி உள்ளது.ஜம்புலியம்பட்டி, வன்னியபாறைப்பட்டி, பாறைக்குளம் பகுதிகளில் சிறுமலை ஓடை வழித்தடங்கள் அமைந்துள்ளது. நொச்சிஓடைப்பட்டி வழியாக வரும் சிறுமலையின் மழைநீரானது 15 ஏக்கர் பரப்பின் சின்னகுளம், 12 ஏக்கர் பரப்பின் மந்தைகுளம், 18 ஏக்கர் பரப்பின் பிரான்குளத்தை நிரப்பி இறுதியாக சந்தனவர்த்தினி ஆற்றுடன் சங்கமித்து கொடகனாற்றில் பெருக்கெடுத்து ஓடியது என்பது நுாற்றாண்டின் கனாவாகி போனது போல் தற்போது இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. அப்போதைய நிலையில் சின்ன குளத்திற்கு மேற்கு பகுதியின் நீரோடையில் தடுப்பணை அமைத்து ஒன்பது ஏக்கர் சுற்றளவில் விவசாயம் செழித்தது. நீர்தேக்க ஷட்டர்களுடன் கூடிய மதகு அமைத்து வன்னிபாறைப்பட்டி, பாறைகுளங்கள் வற்றாத ஜீவநதிகளாய் இருந்தது. தற்போது கால்நுாற்றாண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி அல்லாடுகிறது. குறிப்பாக முள்ளிப்பாடி ஊராட்சிக்கு செல்லும் ஓடைப்பாதையானது பெருமளவு ஆக்கிரமிப்பில் உள்ளது .இங்கே பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை எங்கே என தேடும் நிலையில்ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சென்று இருந்த தடமே தெரியாதபடி செய்து விட்டனர். நீர்பிடிப்பின் 18 ஏக்கர் பிரான் குளமானது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் விளைநிலமாக்க பட்டுள்ளது. சப்போட்டா, தென்னை,நெற்பயிர்களை எந்தவித அச்சமுமின்றி பயிரிட்டு பல ஆண்டுகளாக வருமானமும் ஈட்டுகின்றனர் என்பது. ஆற்று பாதையை ஆக்கிரமித்ததோடு கம்பி வேலிகள் அமைத்து பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆற்று பாதையானது ஓடையாக சுருங்கி தற்போது வாய்க்காலாக மாறி உள்ளது என்பது இயற்கையை சீரழிக்கும் போக்காகும். சிறுமலை ஓடை பாதையை ஆக்கிரமிக்கும் இந்த செயலை தடுக்காவிட்டால் இயற்கை சீர்கெட்டு பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஜம்புலியம்பட்டி, பாறைப்பட்டி, அப்பிநாயக்கன்பட்டியை சுற்றிய 30 ஆண்டு கால ஆக்கிரமிப்புகளை வருவாய்துறை அதிகாரிகள் களைத்தெறிந்து தடுப்பணையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமாக பாறைக்குளம், பிரான்குளத்திற்கு நீர்வரத்தை அதிகரிக்க செய்தால்தான் மண் வளம் பாதுகாக்கப்படும். நிலத்தடிநீர் பாதிக்கப்படும்
வெள்ளக்காளை, விவசாயி: நீரோடையில் ஆக்கிரமிப்பு செய்தால் நிலத்தடி நீர் கேள்விக்குறியாகும் என்பதை அறிந்தும் சிலர் இந்த செயல்களில் ஈடுபடுவதால் ஜம்புலிம்பட்டி பகுதியை சுற்றிய குளங்களுக்கு பத்தாண்டுகளாகவே நீரோட்டம் இல்லாமல் காய்ந்து கிடப்பது பரிதாபமாக உள்ளது. மந்தைகுளம், பிரான்குளத்தை சுற்றிய 100 ஏக்கர் விவசாய நிலங்களும் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துமீறிய ஆக்கிரமிப்புக்களால் இன்னும் சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு குடிநீர் ஆதாரமும் கெடும் என்பதில் சந்தேகமில்லை. ஆக்கிரமிப்பு அகற்றலில் அலட்சியம்
பரமசிவம், விவசாயி: நீர்நிலை பகுதிகளில் இத்தகைய துணிவான ஆக்கிரமிப்பு என்பது எந்த அடிப்படையில் நிகழ்கிறது என்பது புதிராக உள்ளது. ஆக்கிரமிப்போடு நிற்காமல் அந்த இடங்களை பட்டா இடங்களாக பாவித்து பயிரிடுவது மாவட்ட நிர்வாகத்தின் மேலுள்ள அலட்சிய போக்கையே பிரதிபலிக்கிறது. ஒருசிலரின் இந்த செயல்களை அதிகாரிகள் கண்டுக்காமல் விட்டால் நாளடைவில் நீர்வழி தடம் கேள்விக்குறியாகி விடும். மயில்களை காக்க வேண்டும்
முருகன் விவசாயி:ஆக்கிரமிப்பு பகுதிகளை நில அளவை செய்வதற்கு வரும் வருவாய் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்ட ஒருசில நாட்களில் காணாமல் போய்விடுகின்றனர். பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான பணிகள் சம்மந்தமாக எதுவுமே நடக்காதது போல் பணிகள் கிடப்பில் போடப்படுவது என்ன மாயம் என தெரியவில்லை. மயில்களின்நடமாட்டமும் இந்த பகுதியில் அதிகம் உள்ளது. ஆனால் அதன் பாதுகாப்பிற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்வதாக தெரியவில்லை. அதிகாரிகள் கண்காணித்து மயில்களையும் காக்க வேண்டும். மயானத்திலும் ஆக்கிரமிப்பு
முத்துராஜ், விவசாயி: ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் ஆற்றுவழித்தடம் இருப்பதை கூட ஒருவகையில் சகித்து கொள்ளலாம். ஆனால் பெரியகோட்டை கிராமத்தின் அப்பிநாயக்கன்பட்டியில் உள்ள சுடுகாட்டை ஆக்கிரமிப்பாளர்கள் கம்பி வேலி கொண்டு அடைத்திருப்பது ஆன்மாக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மயான வழிப்பாதை அடைபட்டதால் குறுகிய இடத்தில் நான்கடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கி சகதியாக உள்ளது. பாறைப்பட்டியிலிருந்த சுடுகாடு ஆக்கிரமிப்பால் வழி இல்லாததால் 30 குடும்பத்தினர் இந்த மயானத்தில்தான் உடல்களை நல்லடக்கம் செய்யும் நிலை உள்ளது. அந்த நீரில் இறங்கி மயானத்தின் நீர்பிடிப்பு பகுதியில் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்தால் அது எப்படி நல்லடக்கமாகும் என தெரியவில்லை. ஆக்கிரமிப்பின் உச்சமாக மயான இடத்தை மறித்துள்ளதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றப்படும்
வில்சன், தாசில்தார், பாலகிருஷ்ணாபுரம் கிழக்கு: நீர் நிலை ஆக்கிரமிப்பு என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகமாகும். தயவின்றிய ஆக்கிரமிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இடையில் அரசு தின விடுமுறைகள் வந்ததால் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதை போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்புலிம்பட்டி, களத்துப்பட்டி, சிலுவத்துார் ரோட்டின் ஏர்போர்ட் பகுதிகளில் உள்ள நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.