| ADDED : ஜன 19, 2024 05:28 AM
பழநி: ''பழநி தைப்பூசம் விழா வரும் பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி கோயிலில் தரிசனம் செய்து திரும்ப வேண்டும். அவர்களுக்கு பணி செய்வது நமக்கு கிடைத்த பாக்கியம், ''என அதிகாரிகளுக்கு கலெக்டர் பூங்கொடி அறிவுரை வழங்கினார்.பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா இன்று துவங்க உள்ள நிலையில் பழநி பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பான நடந்த அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தைப்பூச திருவிழாவிற்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம் வழியே பழநி வந்தடைவர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தர 39 இடங்களில் தற்காலிக நிழல் பந்தல்கள், மின், குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளன. ஒளிரும் குச்சிகள், ஒளிரும் பட்டைகள் தயார் நிலையில் உள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி பஸ் ஸ்டாண்டை சுகாதாரமாக வைக்கவும் மாற்றுத்திறனாளிகள் வசதிகளை குறித்தும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். பாதயாத்திரை பக்தர்கள் இரவில் பாதுகாப்புடன் நடந்து வர வழிநெடுகிலும் டியூப் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்க வேண்டும். மருத்துவ முதலுதவி முகாம்கள், தீயணைப்பு துறை மீட்பு பணிகள் தீவிரமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். உணவு , தங்குமிடங்கள் அமைத்து தரப்படும்.பழநி நகரில் தைப்பூச தினத்தை முன்னிட்டு ஒரு வழி பாதையாக மாற்றம் செய்ய வேண்டும் அதற்கான அறிவிப்பு பலகைகளை முறையாக நிறுவ வேண்டும். அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். தைப்பூசம் வரும் பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி கோயிலில் தரிசனம் செய்து திரும்ப வேண்டும். அவர்களுக்கு பணி செய்வது நமக்கு கிடைத்த பாக்கியம் என்றார்.எஸ்.பி பிரதீப், பயிற்சி கலெக்டர் வினய் மீனா, திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஓ சரவணன், கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.