| ADDED : மே 21, 2024 06:43 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை,கொடைக்கானல்,ஆடலுார்,பன்றிமலை,பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலை வாழ் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இவர்கள் பல இடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். ஓட்டுரிமை உள்ளிட்ட எல்லா சலுகைகளும் இருந்தும் முறையான வழிகாட்டல் இல்லாமல் மலை பகுதிகளிலே அவர்களது வாழ்க்கை முடங்கும் நிலை உள்ளது. அரசு வேலை உள்ளிட்ட பணிகளுக்கு ஒருசிலர் செல்கின்றனரே தவிர மற்றவர்கள் யாரும் முன்வரவில்லை. அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆள் இல்லை. எத்தனையோ திட்டங்கள் இருந்தும் அதை பயன்படுத்த தெரியாமல் உள்ளனர். வனப்பகுதிகளில் கிடைக்கும் மலைத்தேன்,கனிகளை விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். மலை வாழ் மக்கள் வனத்துறைகளில் பணியாற்றினால் எளிதில் அங்கு நடக்கும் குற்ற செயல்களை தடுக்கும் வாய்ப்புகள் உருவாகும்.தன்னார்வலர்கள் எங்கேயாவது அத்தி பூத்தது போல் மழை வாழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க புறப்பட்டு வருகின்றனர். ஆனால் அருகிலே இருக்கும் வன அதிகாரிகள் அந்த வேலையை செய்யாமல் உள்ளனர். இதனாலே அவர்களின் வாழ்க்கை தரம் உயராமல் உள்ளது. கல்வியிலும் நாட்டமில்லாமல் இருக்கும் இவர்களுக்கு தகுந்த வழிகாட்டல் வேண்டும். இதன்மீது கவனம் செலுத்த தகுந்த வழிகாட்டலுக்கு வழி வகை செய்ய வேண்டும்.