உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடகனாற்றில் கருவேல முட்கள்; தண்ணீர் வந்தா கூட தெரியல

குடகனாற்றில் கருவேல முட்கள்; தண்ணீர் வந்தா கூட தெரியல

வேடசந்துார்: தாடிக்கொம்பில் இருந்து அழகாபுரி அணை வரையிலான குடகனாற்றில் வழி நெடுக கருவேல முட்கள் நிறைந்திருப்பதால் மக்கள் ஆற்றுக்குள் இறங்கவே அச்சப்படும் நிலை உள்ளது. அரசு ,தன்னார்வ நிறுவனங்கள் முட்களை அகற்ற முன்வர வேண்டும்.ஆத்துாரிலிருந்து தாடிக்கொம்பு, வேடசந்துார், அழகாபுரி வழியாக மாவட்ட எல்லை வரை செல்லும் குடகனாற்றில் வழி நெடுக கருவேல முட்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒரு காலத்தில் தமிழகத்தில் விறகுக்கு பஞ்சம் ஏற்பட்டதால் கருவேலன் விதைகளை துாவி, விறவுக்காக வளர்த்த கதை உண்டு. காலம் மாற்றம், நாகரீக வளர்ச்சி காரணமாக இன்று 90 சதவீத வீடுகளில் காஸ் அடுப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கருவேல முட்களை வெட்ட ஆட்கள் இல்லை. மாநில அளவில் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் கோரிய நிலையில் அதற்கும் சிலர் நீதிமன்றம் சென்று தடையானை பெற்றதால் கருவேல முட்களை அழிக்கும் நோக்கம் தடைபட்டது. இதனால் இன்று காடு மேடெல்லாம் கருவேல முட்கள் பரவி கிடக்கின்றன.குடகனாறு ஆற்றில் ஆட்கள் இறங்க முடியாத அளவிற்கு முட்கள் நிறைந்து இருப்பதால் சமீபத்தில் ஆற்றில் வந்த தண்ணீரை கூட மக்களால் காண முடியவில்லை. இதனை அகற்ற தற்போது நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில் கருவேலங்களை ஒட்டுமொத்தமாக அகற்ற அரசு , தன்னார்வ நிறுவனங்கள், தன்னார்வலர்கள் முன் வர வேண்டும் .இதுவே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

டெண்டர் மூலம் அகற்றுவாங்களாம்

த.ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர், வேடசந்துார் :தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் பிடிப்பு பகுதிகளிலும் உள்ள கருவேல முட்களை அகற்றக் கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிலர் தடை உத்தரவு பெற்றனர். தற்போது அந்தத் தடை உத்தரவும் நீக்கப்பட்டு விட்டது. கருவேல முட்களை அகற்றுவதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். குடகனாறு பகுதியில் உள்ள கருவேல முட்களை அகற்ற பொதுப்பணி துறையிடம் அனுமதி கேட்டோம். அதற்கு நாங்கள் டெண்டர் தான் விடுவோம். நீங்கள் வேண்டுமானால் டெண்டர் எடுத்து முட்களை அகற்றுங்கள் என தெரிவித்தனர். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகமாவது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குடகனாறு பகுதியில் உள்ள கருவேல முட்களை அகற்ற வேண்டும் .

குளிக்க கூட முடியல

ஆர்.எம்.நடராஜன், தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்கம், இளைஞரணி தலைவர், வேடசந்துார்:கருவேல முட்களால் விவசாயம் பாழ்பட்டு விட்டது. இந்த குடகனாற்றில் எந்த இடத்திலும் மக்கள் இறங்கி குளிக்கவோ, நடந்து செல்லவும், கடந்து செல்லவும் முடியாது. ஆற்றில் தண்ணீர் வந்த போது கூட வேடசந்துார் பாலம் பகுதியில் நின்று தான் தண்ணீரை பார்க்க முடிந்தது. வேறு எங்கும் தண்ணீர் கண்ணுக்கு தெரியவில்லை. காரணம் முட்களுக்கு இடையே தான் தண்ணீர் செல்கிறது. குடகனாறு அணை ஆற்றின் வழி வழி நெடுகிலும், அணைக்கட்டு பகுதியிலும் உள்ள கருவேலன் முட்களை அரசு அகற்ற வேண்டும்.

தீர்வு

குடகனாற்றில் வழி நெடுகிலும் கருவேல முட்கள் நிறைந்து காணப்படுவதால் பாம்பு தொல்லைகளுக்கு பயந்து மக்கள் ஆற்றுக்குள் இறங்கவே அச்சப்படுகின்றன. நிலத்தடி நீரும்கெட்டு விட்டது. இதற்கெல்லாம் ஒரே தீர்வாக தமிழக அரசுபோதுமான நிதி ஒதுக்கி முட்களை அகற்றி ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும். அவ்வாறு நிதி ஒதுக்க முடியாத நிலையில் பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும், தன்னார்வலர்களும் சேர்ந்து குடகனாற்றை சுத்தப்படுத்தபோதுமான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்புகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். இந்த இரண்டும் நடக்கவில்லை என்றால் குடகனாற்றை யாராலும் சுத்தப்படுத்த முடியாது. அதோகதிதான். முயற்சி ஏதாவது ஒரு வகையில் தொடரட்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை