ஒட்டன்சத்திரம் : புதியதாக கட்டியும் பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம் , துார்வாரப்படாத ஓடை என ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டில் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளம் உள்ளன.தும்மிச்சம்பட்டிபுதுார், கஸ்துாரி நகர், மாருதிநகர், நாயக்கனுார் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடை பிரிக்கப்பட்டு சொந்த கட்டடத்தில் இயங்குகிறது. ஊநீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டில் உள்ளது. போர்வேல் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.ஒட்டன்சத்திரம் மலையடிவாரத்தில் கன மழை பெய்யும் போது மழைநீரானது தும்மிச்சம்பட்டிபுதுார், கஸ்துாரிநகர் கிழக்கு பகுதியில் உள்ள ஓடை வழியாக செல்லும். இந்த ஓடை தும்மிச்சம்பட்டிபுதுார் வரை துார்வாரப்பட்டுள்ளது. கஸ்துாரி நகர் பகுதியில் துார்வாரப்படாமல் இருப்பதால் புல் பூண்டுகள் முளைத்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசு தொல்லை உள்ளது. கட்டி முடிக்கப்பட்டும் சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் அப்படியே உள்ளது. பூங்கா அருகே குப்பையை கொட்டி தீ வைப்பதால் குடியிருப்பு வாசிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. கஸ்துாரி நகர் வடக்கு பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இங்கு மின்கம்பம் நிறுவி தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். கன்னிமார் கோயில் வடக்குப் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. விரிவாக்கப் பகுதிகளில் ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு
கார்த்திக், தி.மு.க., வார்டு துணை செயலாளர்: வார்டு மக்களுக்கென தனியாக ரேஷன் கடை இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது தனியாக ரேஷன் கடை பிரிக்கப்பட்டு சொந்த கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கட்டப்பட்டு பல மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி தற்போது பயன்பாட்டில் உள்ளது. தெரு விளக்குகள் தேவை
முத்துராமன், முன்னாள் கவுன்சிலர்: தும்மிச்சம்பட்டிபுதுாருக்குள் செல்லும் பாலத்தை அகலப்படுத்த வேண்டும். கஸ்துாரி நகர், கன்னிமார் கோயில் பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. கஸ்துாரி நகர் வடக்கு பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். இந்த வார்டு வழியாக செல்லும் ஓடை துார்வாரப் படாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி உள்ளது. ஓடை அருகில் செல்லும் ரோட்டில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் பயணிக்க அச்சமாக உள்ளது. பூங்கா இடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கோரிக்கைகள்நிறைவேற்றம்
கனகராஜ், கவுன்சிலர்(தி.மு.க.,): அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இந்த வார்டு மக்களுக்கு பயன்படும் வகையில் ரேஷன் கடை பிரிக்கப்பட்டு சொந்தக் கட்டடத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது. பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தெருக்களில் உள்ள தார் ரோடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வார்டு வழியாகச் செல்லும் ஓடை துார்வாரப்படும். தெருவிளக்குகள் அமைக்க மின்கம்பங்கள் வந்துள்ளது. நாயக்கனுாரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. கன்னிமார் கோயில் பகுதியில் சாக்கடை அமைக்கப்படும். சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றார்.