உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் கடையில் எலிகள்;கழிவுகளால் தொற்று பிரச்னைகளின் பிடியில் பழநி நகராட்சி 22 வது வார்டு

ரேஷன் கடையில் எலிகள்;கழிவுகளால் தொற்று பிரச்னைகளின் பிடியில் பழநி நகராட்சி 22 வது வார்டு

பழநி: ரேஷன் கடையில் எலிகள், சாக்கடை துார்வாராததால் கழிவுகளால் தொற்று என பழநி நகராட்சி 22 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.அய்யனார் சந்து, மாமன உசேன் சந்து, பெரிய மஸ்ஜித் வடக்கு, தெற்கு, கிழக்கு, சந்துகள், பாறக்கடை தெர, சக்கரை ராவுத்தர் சந்து, குறுக்குச் சந்து, ஹவுஸ் மியான் சாய்பு சந்து உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் தெரு நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது .பெரியவர்கள் ,குழந்தைகள் சிரமம் அடைகின்றனர்.தெருவிளக்குள் முறையாக இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கின்றனர்.சொந்த கட்டடத்தில் ரேஷன் கடை இல்லாததால் எலிகள் தொல்லையால் பணியாளர்கள் பாதிக்கின்றனர்.ரேஷன் பொருட்களும் வீணாகின்றன. சாக்கடைகள் துார் வாரப்படாததால் கழிவுகள் தேங்கி தொற்றுநோய்களுக்கு வழி பிறக்கிறது.

ரேஷன் கடையில் எலிகள்

காதர் மைதீன், லாட்ஜ் உரிமையாளர், மாமன உசேன் சந்து: தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளது. ஜிகா பைப்லைன் எங்கள் வார்டு பகுதியில் முழுமையாக அமைக்கப்படவில்லை. விரைவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ரேஷன் கடையில் எலி தொல்லை அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

நிசார் அகமது, துணிக்கடை ஊழியர், பாறக்கடை சந்து: காந்தி மார்க்கெட் ரோடு அதிக போக்குவரத்து நெரிசலுடன் உள்ளது. இதற்கு இணையாக வையாபுரியை குளத்து கரையை ஒட்டியவாறு புதிய சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் 22 வது வார்டு மக்கள் சாலை வசதி மேம்படும்.

சேதமான பாதைகள்

ஜான் பசீர், சக்கரை ராவுத்தர் குறுக்குச் சந்து: தெரு பாதைகள் மிகவும் மோசமாக உள்ளதால் வயதானவர்கள், குழந்தைகள், டூவீலரில் செல்பவர்கள் கீழே விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது. தெரு நாய் தொல்லை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

விரைவில் ரேஷன்கடை

பஜ்லுார் ரகுமான், கவுன்சிலர், (தி.மு.க.,) : வார்டில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் பரிந்துரையின்படி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சாலைகள் அமைக்கப்பட உள்ளது. ரேஷன் கடை புதிதாக அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சொந்த கட்டடத்தில் ரேஷன் கடை அமைக்கப்படும். சாக்கடை அடிக்கடி துார்வாரப்படுகிறது. தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.சுகாதார வளாகம் சேதமடைந்துள்ளது.விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை