ரூ.6 லட்சம் மோசடி: சென்னை ஜவுளி வியாபாரி கைது
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வாலிபருக்கு பொதுப்பணித்துறையில் அரசு வேலை, தனியார் குழந்தைகள் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் வாங்கி தருவதாக இருவரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த ஜவுளி வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திண்டுக்கல் ரவுண்ட்ரோடை சேர்ந்த வாலிபர் முகமது மர்ஜித்,26. இவர் சிவில் இன்ஜினியரிங் படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். சென்னை சீதக்காதி நகரை சேர்ந்த ஜவுளி வியாபாரி முகமது சகாப்தின்58. 2022 ல் முகமது சகாப்தின் தனக்கு அரசு அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. பணம் கொடுத்தால் பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணி வாங்கி தருகிறேன் என முகமது மர்ஜித்திடம் கூறினார். இதை உண்மை என நம்பிய முகமது மர்ஜித் ரூ.2.50 லட்சத்தை முகமது சகாப்தினிடம் கொடுத்தார். இதேபோல் திண்டுக்கல் ரவுண்ட்ரோடை சேர்ந்த ரபீக்35. இவர் திண்டுக்கல்லில் தனியார் குழந்தைகள் பள்ளி நடத்துகிறார். இவரிடமும் முகமது சகாப்தின்,உங்கள் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருகிறேன் எனக்கூறி ரூ.3.50 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும் முகமது சகாப்தினிடம் தங்கள் பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் அவர் காலம் தாழ்த்தி வந்தார். திண்டுக்கல் வந்த முகமது சகாப்தினை,பணம் கொடுத்து ஏமாந்த முகமது மர்ஜித், ரபீக் இருவரும் பிடித்து திண்டுக்கல் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் முகமது சகாப்தினை, கைது செய்து விசாரிக்கின்றனர்.