உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அணை நீருக்கு வழியின்றி வறண்டு போன கொல்லப்பட்டி குளம்

அணை நீருக்கு வழியின்றி வறண்டு போன கொல்லப்பட்டி குளம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொல்லப்பட்டி குளத்திற்கு பரப்பலாறு அணை நீர் கிடைக்க வழிவகை இல்லாததால் பல ஆண்டுகளாக வறண்டே காணப்படுகிறது. அணை நீர் இந்த குளத்திற்கு செல்லும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது கொல்லபட்டி குளம். 60 ஏக்கருக்கு மேல் கொண்ட இந்த குளத்தின் நீராதாரம் அத்திகோம்பை ஊராட்சி வழியாக செல்லும் ஓடை ஒன்று மட்டும் தான். கோம்பை பகுதியில் பலத்த மழை பெய்யும் போதும், காளாஞ்சிபட்டி ஊத்துக்குளம் நிரம்பி மறுகால் செல்லும்போதும் இந்த ஓடையில் நீர் வரத்து இருக்கும். ஓடையின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடையில் சென்றால்தான் குளத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த குளம் நிரம்பி மறுகால் செல்லும்போது குளத்தை சுற்றிய நூற்றுக்கணக்கான விவசாய கிணறு கள், போர்வெல்களுக்கு நீர் வரத்தை கொடுக்கிறது. இதோடு காளாஞ்சிபட்டி ஊராட்சி பகுதியில் உள்ள பல கிணறுகளுக்கும் நீர் வரத்து ஏற்படுத்தும். குளம் நிரம்பி மறுகால் சென்று பல ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது குளத்தின் நீர் வரத்து ஓடையில் கழிவு பொருட்கள், இறைச்சி கழிவுகள் பைகளில் கட்டப்பட்டு துாக்கி வீசப்படுகிறது. இவை பல நாட்களாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால் குளத்தின் அருகே சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மற்ற குளங்களுக்கு பரப்பலாறு அணை தண்ணீர் செல்கிறது. இதனால் மழை நன்றாக பெய்யும் நாட்களில் அணையின் உபரி நீரை கொண்டு அதன் கீழ் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கிறது. ஆனால் கொல்லபட்டி குளத்திற்கு பரப்பலாறு அணை நீரை கொண்டு செல்ல வழி இல்லாததால் ஆண்டுக்கணக்கில் குளம் வறண்டு காணப்படுகிறது. குளத்து பகுதியில் உள்ள செடி கொடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணை நீர் வேண்டும்

சி.செந்தில்குமார், விவசாயி, குட்டில்நாயக்கன்பட்டி: குளம் நிரம்பி மறுகால் சென்று 16 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. குளத்திலிருந்து மறுகால் செல்லும் ஓடையை துார்வார வேண்டும். ஓடையில் விடப்படும் கழிவு நீர் குளத்திற்கு வந்து சேர்கிறது. இதனால் குளம் கழிவு நீர் சேகரமாகும் இடமாக மாறிவிடும். மழையை நம்பி உள்ள இந்த குளத்திற்கு மாற்று திட்டங்களை செயல்படுத்தி பரப்பலாறு அணை தண்ணீர் கிடைக்கும்படி வழிவகை செய்ய வேண்டும்.

நீர்வரத்து ஓடையில் குப்பை

எல்.டி.ருத்திரமூர்த்தி, பா.ஜ., முன்னாள் கிழக்கு ஒன்றிய தலைவர், ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் கொல்லப்பட்டி குளத்தின் கரைப்பகுதியிலும், நீர்வரத்து ஓடையிலும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் குளம் மாசடைகிறது. குளம் நிரம்பினால் சுற்றிய பல விவசாயக் கிணறுகளுக்கு நீர் வரத்து ஏற்படும். புதிய பைபாஸ் ரோடு அமைக்கப்பட்ட பிறகு ரோடு பகுதியை யொட்டி உள்ள கொல்லபட்டி குளக்கரையையும் விட்டு வைக்காமல் குப்பையை கொட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை