உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதமான ரோடுகளை சீரமைப்பதில் சுணக்கம் அலட்சியம் வேண்டாமே; தினமும் நடக்கும் விபத்துகளால் மக்கள் அவதி

சேதமான ரோடுகளை சீரமைப்பதில் சுணக்கம் அலட்சியம் வேண்டாமே; தினமும் நடக்கும் விபத்துகளால் மக்கள் அவதி

நத்தம் : திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ரோடுகளில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை தொடர்கிறது. மழைக்காலம் தொடங்குவதால் இதன்மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். மாவட்டத்தில் கிராம சாலைகள் முதல் மாநில , தேசிய நெடுஞ்சாலைகளில் ஆபத்தான பள்ளங்களுடன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடு சேதம் அடைந்துள்ளது.மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் இது போன்று ரோடுகளில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களை சீரமைக்காமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கில் உள்ளனர். கிராம ரோடுகள் முதல் நகர், மலை பகுதி, நெடுஞ்சாலை ரோடுகள் என அனைத்து வகையான ரோடுகளிலும் இதுபோன்ற பள்ளங்கள் உள்ளன. பெரும்பாலான பாலங்கள், மேம்பாலங்களில் ஆபத்தான பள்ளங்களும் மழைநீர் வெளியேறுவ தற்காக வைக்கப்பட்டுள்ள துவாரங்களில் குழந்தைகள் விழும் அளவிற்கு பெரிய அளவில் உள்ளது. இது ரோட்டில் நடந்து செல்லும் சிறுவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.இது போன்ற துவாரங்களில் சிறுவர்கள் உள்ளே விழுந்துவிடாத வண்ணம் வலைகள் அமைக்க வேண்டும். மழையின் போது பள்ளங்களில் டூவீலர் முதல் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்களில் சிக்குவதும், சிறுகாயங்கள் முதல் உயிரிழப்பு வரை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரோடுகளில் உள்ள ஆபத்தான பள்ளங்கள் தெரியாததால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் செல்வதாலும் , தரமற்ற ரோடு பணிகளால் ரோடுகளில் தண்ணீர் தேங்குவதாலும் ரோடுகள் சேதமாகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள சேதம் அடைந்த ரோடுகளை கண்டறிந்து அதனை உடனடியாக சீரமைப்பது அவசியமாகிறது. துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...................... நடவடிக்கை இல்லை ரோடுகளில் ஆபத்தான பள்ளங்கள், விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள ரோடு சேதங்களால் விபத்துக்கள் அதிகரிக்கிறது.குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஆபத்தான பள்ளங்களில் சிக்கி உயிரிழப்புகள் வரை ஏற்படுகிறது. மழைநீர் அரிப்பு, ரோட்டில் தண்ணீர் தேங்குவது, தரமற்ற முறையில் ரோடு அமைப்பது உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான ரோடுகளில் திடீர் பள்ளங்கள் உருவாகி இது போன்று விபத்துக்கள் ஏற்படுகிறது. துறை சார்ந்த அதிகாரிகள் ரோடு சேதங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விபத்தை குறைக்க முடியும். சிவசங்கரன்,பத்திர எழுத்தர்,நத்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை