ஈரோடு:''ஈரோடு அரசு மருத்துவமனையில், 1,000 லிட்டர் சேமிக்கும் வகையில் தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.ஈரோடு, அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு உயர் சிகிச்சை மைய வளாகத்தில் தாய்ப்பால் வங்கி, உடன் வருவோர் அமரும் இடம் ஆகியவை நேற்று திறக்கப்பட்டன. மேயர் நாகரத்தினம், மருத்துவம் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தாய்ப்பால் வங்கி உள்ளிட்டவையை திறந்து வைத்து கூறியதாவது:சுகாதாரத்துறை மற்றும் ரோட்டரி சார்பில், தாய்ப்பாலை சேகரித்து, பாதுகாத்து தேவையானவர்களுக்கு வழங்க, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இங்கு சேகரிக்கப்படும் தாய்ப்பால், ஓராண்டு பாதுகாத்து, மற்றவர்களுக்கு வழங்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.மிக சில இடங்களில் மட்டுமே, இந்த வசதி உள்ளது. தற்போது ஈரோட்டில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, 1,000 லிட்டர் தாய்ப்பால் சேமித்து வைக்கப்படும் வசதி உள்ளது.இங்கிருந்து வசதியான குடும்பத்து குழந்தை, ஏழைகள் என அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்படும். பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடத்தில் தேவையான கருவிகள், டாக்டர்கள் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.கள் விற்பனை செய்வது, ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது குறித்து நீதிமன்றம் கருத்தை எழுப்பி உள்ளது. இதுபற்றி, ஆய்வு செய்து தெரிவிக்கப்படும். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இன்று இரவு ஈரோட்டுக்கு வருகை புரிகிறார். நாளை பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆய்வு கூட்டங்களில் ஈடுபடுகிறார்.இவ்வாறு கூறினார்.