தொழிலாளர் துறை ஆய்வில் 35 கடைகள் மீது நடவடிக்கை
ஈரோடு :ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள் கடந்த மே மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.இம்மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், ரேஷன் கடை, வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் வினியோகம் செய்தல், அவற்றில் எடை அளவு குறைவாக வினியோகிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக, 111 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டதில், 31 கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டது.சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், புனித தலங்களில் உள்ள கடைகளில் பொட்டல பொருட்களின் எடை, விற்பனை நிலை போன்றவை குறித்து, 37 கடைகள், நிறுவனங்களில் நடந்த ஆய்வில் மூன்று கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. அக்கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தவிர, 46 சூப்பர் மார்க்கெட், குளிர்பான கடைகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் உள்ளார்களா என ஆய்வு செய்யப்பட்டது. 10 நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக நடந்த ஆய்வில், 1 நிறுவனத்தில் முரண்பாடு கண்டறியப்பட்டு இணை இயக்குனரிடம் கேட்பு மனு தாக்கலானது.இத்தகவலை, தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.