| ADDED : மே 09, 2024 06:23 AM
ஈரோடு : பெருந்துறை, சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்களை, ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் ஒத்தி வைக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்தது. முதலீட்டாளர்கள் அளித்த புகார்படி, ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான, விஜயமங்கலம் அருகே சின்ன வீரசங்கிலி பகுதி யில் உள்ள, 6 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை ஏலம் மூலம் விற்பனை செய்து, அந்த பணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கணக்கில் சேர்த்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில், நேற்று சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் தொடர்பான பொது ஏலம் நடந்தது. ஏலத்தில், 25 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி, 10 பேர் கலந்து கொண்டனர். ஆரம்ப ஏல தொகையாக, 8 கோடியே, 45 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. நிலத்தை வாங்க யாரும் முன் வராததால், ஏலம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.