கிடப்புக்கு போன சீரமைப்பு பணி போக்குவரத்து துண்டிப்பால் அவதி
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 14வது வார்டு அசோகபுரம் அருகில், கலைமகள் வீதியில் ஏராளமான குடியிருப்புகள், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பவானி மெயின் ரோட்டில் இருந்து கலைமகள் வீதிக்கு செல்லும் நுழைவு பகுதி தார்ச்சாலை திடீரென சரிந்தது. இதனால் சீரமைப்பு பணிக்காக சாக்கடை மீது செல்லும் சிறுபாலம் அகற்றப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த, 15 நாட்களுக்கு முன்பு கலைமகள் வீதி சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியது.இதனால் நுழைவு பகுதியின் இடது புறம் தார்ச்சாலைக்கு அடியில் அரிப்பு ஏற்பட்டு சரிந்தது. ஆய்வு செய்த மாநகராட்சி அலுவலர்கள், சாக்கடை மேல் செல்லும் சிறுபாலத்தை பெயர்த்து எடுத்தனர். சீரமைப்பு பணி துவங்கப்படும் எனக்கூறி சென்றனர். ஆனால், 15 நாட்களை கடந்தும் பணி தொடங்காததால், அவசர தேவைக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இவ்வாறு கூறினர்.