xஈரோடு: ஈரோட்டில் மீட்டர் இல்லாத ஆட்டோக்கள்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. டீஸல் விலையேற்றதை காரணம் காட்டி, கூடுதல் கட்டணம் கேட்பதால், ஈரோடு மக்கள் தவிக்கின்றனர். ஈரோட்டில் பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஜங்ஷன், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், முக்கிய சந்திப்புகள், தெரு முனைகளில், ஆட்டோ ஸ்டாண்டுகள் அமைந்துள்ளன. தவிர, பஸ் ஸ்டாண்டில் இருந்து, நகரின் பல்வேறு இடங்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக இரண்டு கி.மீ.,க்கு 30 ரூபாய், இரவு நேரத்தில் குறைந்தபட்சம் 50 ரூபாய், வெய்ட்டிங் கட்டமாக 15 நிமிடத்துக்கு 10 முதல் 20 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். ஷேர் ஆட்டோக்களில் ஏறி இறங்கினால், குறைந்தபட்சமாக மூன்று ரூபாயும், அதிகபட்சமாக 10 ரூபாயும் வசூலிக்கின்றனர். இரவு நேரத்தில், ஷேர் ஆட்டோ செல்லும் வழிகளில் எங்கு ஏறி, எங்கு இறங்கினாலும், 10 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஆட்டோவுக்கு அனுமதி வழங்கும்போதே, கி.மீ.,க்கு ஏழு ரூபாய் கட்டணம், காத்திருக்க நிமிடத்துக்கு 40 பைசா கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆட்டோக்களில் மூன்று பயணிகள் ஒரு டிரைவர் உள்பட நான்கு பேர் பயணம் செய்யவும், ஷேர் ஆட்டோக்களில் ஐந்து பயணிகள் ஒரு டிரைவர் உள்பட ஆறு பேர் செல்லவும்தான் அனுமதி உண்டு. தவிர, 10 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்ல அனுமதி பெற்றுள்ளனர். ஆட்டோக்கள் கட்டாயமாக மீட்டர் பொருத்தி, பயணிகளை ஏற்றிச் செல்லும்போது, மீட்டர் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டுப்பாடு. பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் இருப்பதில்லை. மீட்டர் இருந்தாலும், அவை காட்சிப்பொருளாகவே உள்ளன. பயணிகளிடம் வண்டியில் ஏறும்போதே, ஏரியா வாரியாக, வாடகையை கூறிய பின்னரே, அழைத்துச் செல்கின்றனர். மேலும், மெயின்ரோட்டில் இருந்து தெருக்களுக்குள் செல்ல வேண்டுமானால், அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். டீஸல் விலை உயர்வைக் காரணம் காட்டி, கடந்த வாரம் முதல் ஆட்டோக்களில் குறைந்த கட்டணமாக 40 ரூபாயும், இரவு நேரத்தில் குறைந்தபட்சம் 60 ரூபாயும், ஷேர் ஆட்டோவில் நான்கு ரூபாயும், அதற்குபின் 5 ரூபாய் துவங்கி 12 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்திவிட்டனர். பொதுமக்களும், கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு, புலம்பியபடியே செல்கின்றனர்.