உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உயரம் குறைந்த ரயில்வே பாலத்தில் எச்சரிக்கை பலகையின்றி திண்டாட்டம்

உயரம் குறைந்த ரயில்வே பாலத்தில் எச்சரிக்கை பலகையின்றி திண்டாட்டம்

ஈரோடு: உயரமான லாரிகள் செல்ல முடியாத, கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில், எச்சரிக்கை பலகை இல்லாததால், டிரைவர்கள் பெரிதும் திண்டாடுகின்றனர். கரூர், வெள்ளகோவில், தாராபுரம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் வழியாகவே, ஈரோடு நகருக்குள் வர வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் 15 அடி உயரமே இருந்தது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பழைய பாலத்தை ஒட்டியே, கன ரக வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில், கூடுதலாக குகை பாலம் கட்டப்பட்டது. எனினும், வெளியூரில் இருந்து ஈரோடு நகருக்கு வரும் கனரக வாகனங்கள், கொல்லம்பாளையம் ரவுண்டானாவை தாண்டியதும், வழி தெரியாமல், பழைய குகை பாலம் இருக்கும் ரோட்டில் நுழைந்து விடுகின்றன. பாதி தூரம் வந்ததும், உயரம் குறைவான பாலம் இருப்பதை அறிந்து, திரும்பிச் செல்ல முடியாமல், அவை 'ரிவர்ஸி'லேயே வந்து, புதிய பாலம் ரோட்டுக்கு திரும்ப வேண்டியுள்ளது. இதனால், பின்னால் வரும் வாகனங்கள் ஈரோடு நகருக்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், கொல்லம்பாளையம் ரவுண்டானாவை தாண்டியதுமே, பழைய பாலத்துக்குள் செல்ல முடியாத வகையில், இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அந்த இரும்பு ஆங்கிள் திருட்டு போய்விட்டது. இதனால், பழைபடி கனரக வாகனங்கள் உயரம் குறைந்த பழைய பாலம் இருக்கும் ரோட்டில் சென்று திண்டாடுகின்றன. பாலம் இருப்பதை டிரைவர்கள் அறியும் வகையில், குறைந்தபட்சம் எச்சரிக்கை பலகையாவது வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை