டிரம்கள் சேதம்; அரவை மெஷின் பழுது குப்பையுடன் காத்துக்கிடக்கும் மாநகராட்சி வாகனங்கள்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டுகள் உள்ளன. மண்டலத்துக்கு, ௧௫ வார்டுகள் வீதம், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.இதன்படி இரண்டாவது மண்டலத்தில், 15 வார்டுகளில் துாய்மை பணியாளர்கள் டாடா ஏஸ் வாகனத்தில் சென்று குப்பை சேகரித்து வருகின்றனர். அவற்றை வ.உ.சி., பூங்கா அருகில் மாநகராட்சி இடத்தில் கொட்டி வைத்து, இரண்டு அரவை இயந்திரம் மூலம் அரைத்து, வெண்டிபாளையம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்வது வழக்கம்.மாநகராட்சி இடத்தில் குப்பை கொட்டப்படும் டிரம்கள் சேதமாகி விட்டன. பழுதான ஒரு அரவை இயந்திரமும் சரி செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் வார்டுகளில் இருந்து சேகரித்த குப்பைகளுடன் வந்த வாகனங்கள், அவற்றை கொட்ட முடியாமல், சாலைகளில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.இதுகுறித்து தமிழ்நாடு தூய்மை பணியாளர் சங்க மாநிலத்தலைவர் சண்முகம் கூறியதாவது: இரண்டாவது மண்டலத்தில் தினமும், 30 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. குறிப்பாக இப்பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளதால், காய்கறி கழிவு அதிகம் சேகரிக்கப்படும்.டிரம்கள் சேதமானதும், ஒரு அரவை இயந்திரம் பழுதானதாலும், குப்பைகளை வேகமாக அரைத்து செல்ல முடிவதில்லை. இதனால் துாய்மை பணியாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.இதனால் வாகனங்களில் காத்திருக்கும் பெண் தொழிலாளர்கள் அதிகம் சிரமப்பட வேண்டியுள்ளது.இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.