உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க., பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்

அ.தி.மு.க., பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்

ஈரோடு: ஈரோட்டில் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 ஏக்கர் நிலத்தை அபகரிப்பு செய்துள்ளதாக, அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டது. ஈரோடு ரயில்வே காலனி, மணக்காட்டுத் தோட்டத்தை சேர்ந்த சந்திரன் மனைவி சிவகாமி, நேற்று தனது குடும்பத்தினருடன், ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் புகார் மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு வெள்ளோடு கிராமத்தில் 15 ஏக்கர் நிலம் உள்ளது. எட்டு ஆண்டுக்கு முன், ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் வேங்கை ராஜேந்திரனிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றோம். மூன்று ஆண்டுகளில் இரண்டு லட்சம் ரூபாய் வரை திரும்ப செலுத்தியும், கடன் அசலே தீரவில்லை என்று கூறினார். அதன்பின், எங்களை மிரட்டி, பொய்யான கிரய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு, அடியாட்களுடன் சொத்தினுள் நுழைந்துகொண்டார். இப்பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சலால் எனது கணவர் சென்றாண்டு டிசம்பர் 2ம் தேதி காலமாகிவிட்டார். அரசியல் செல்வாக்கு மிகுந்திருப்பதால், சொத்தை எழுதிக் கொடுக்குமாறு மிரட்டுகிறார். எனவே, மேற்படி நபர் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவகாமி கூறுகையில், ''கடன் பெற்ற போது, 20 ரூபாய் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திட்டு ராஜேந்திரனிடம் கொடுத்தோம். அதை வைத்துதான் போலி கிரய உடன்படிக்கை எழுதிக்கொண்டார். அதை பதிவு செய்யவில்லை. நிலத்தில் அத்துமீறி நுழைந்து, ஆடு வளர்க்கிறார். நிலம் எங்கள் பெயரில் உள்ளதால், எங்கள் பெயரைக் கூறி தொழில் மானியம் பெற்றது போன்ற மோசடிகளையும் செய்துள்ளார்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை