| ADDED : ஆக 11, 2011 11:52 PM
கோபிசெட்டிபாளையம்: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலில் பணம் கைமாறிய வழக்கு தொடர்பாக நேற்று ஒரே நாளில் வங்கி மேலாளர்கள், துணை தாசிதார் உள்பட 21 பேரிடம் விசாரணை நடந்தது. சந்தன வீரப்பனால் 2000 ஜூலை 30ம் தேதி, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். ராஜ்குமாரை விடுவிக்க பல கோடி ரூபாய் பணம் கை மாறியது. இது தொடர்பாக, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 26 பேர் மீது, சேலம் மாவட்டம் கொளத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சத்தியமங்கலம் வனப்பகுதியில் சம்பவம் நடந்ததால் பங்களாபுதூர் போலீஸாருக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. கோபி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. ஜூலை 21ம் தேதி முதல் சாட்சி விசாரணை துவங்கியது. பணம் கை மாறியது தொடர்பாக போலீஸார் தெரிவித்திருந்த 87 சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது. ஜூலை 21ம் தேதி முதல் ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட உறவினர் நாகேஷ், மருமகன் கோவிந்தராஜ், உதவியாளர் நாகப்பா மற்றும் நெருப்பூர் மணி உள்பட ஒன்பது பேரிடம், நீதிபதி கிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
நேற்று மீண்டும் சாட்சி விசாரணை நடந்தது. காவேரிபுரம் இந்தியன் வங்கி மேலாளராக இருந்த குப்புசாமி, கொளத்தூர் இந்தியன் வங்கி மேலாளராக இருந்த குணசேகரன், பென்னாகரம் துணை தாசில்தாராக இருந்த ரங்கநாதன், வி.ஏ.ஓ.,க்கள் மாதேஸ், ராஜேந்திரன் உள்பட 21 பேரிடம் நேற்று நீதிபதி கிருஷ்ணன் விசாரணை செய்தார். வழக்கு தொடர்பாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 24 பேர் நீதிமன்றம் ஆஜரானார்கள். இன்றும் விசாரணை நடக்கிறது.