| ADDED : செப் 03, 2011 12:46 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தற்போது 18 ஆயிரத்து 300 டன் உரம் இருப்பில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி கீழ் பவானி பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மூலம் 39 ஆயிரத்து 420 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, நாற்றங்கால் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையில் விவசாயப்பணி அதிக அளவில் நடக்கிறது. தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் தற்போது, யூரியா 8,000 டன், டி.ஏ.பி., 3,800 டன், காம்ப்ளக்ஸ் 6,000 டன், பொட்டாஷ் 500 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் நடவுப்பணி துவங்கும்போது, மேலும் தேவையான அளவு பொட்டாஷ் உரம் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான அளவு உரம் செப்டம்பர் 10ம் தேதிக்குள் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ''உரக்கடைகளில் விவசாயிகள் உரங்களை வாங்கும்போது, உரிய ரசீது பெற வேண்டும். உர மூடையில் குறிப்பிட்டுள்ள விலைக்கு கூடுதலாக, விலை கொடுக்கக்கூடாது. அவ்வாறு எவரேனும் கூடுதல் தொகை கேட்டால், அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வேளாண் இணை இயக்குனர் அக்பர் எச்சரித்துள்ளார்.