| ADDED : செப் 19, 2011 01:18 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு போஸ்ட் ஆஃபீஸை மூடக்கூடாது என, ஈரோடு நகர காங்கிரஸ்
கமிட்டி சார்பில், தபால்துறை முதன்மை கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் மனு
அளிக்கப்பட்டது.காங்கிரஸ் நகரத் தலைவர் சந்துரு தலைமையில் அளித்த மனு:ஈரோடு
21வது வார்டு, புதுஅக்ரகாஹரம் பகுதியில், 100 ஆண்டுகளாக கிழக்கு போஸ்ட்
ஆஃபீஸ் இயங்கி வருகிறது. நாளையுடன் இதை மூடுவதாக தபால் துறை
அறிவித்துள்ளது.பஸ் போக்குவரத்து இல்லாத இப்பகுதியில், 2,000க்கும்
மேற்பட்டோர் வசிக்கின்றனர். 1,200 பேர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர்.
தவிர, தபால், ஸ்டாம்பு பெற இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ள தலைமை போஸ்ட்
ஆஃபீஸுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, தொடர்ந்து இங்கேயே
செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்தனர்.ஈரோடு
தபால் துறை முதன்மை கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூறியதாவது:ஈரோடு தலைமை போஸ்ட்
ஆஃபீஸின் கீழ், கிழக்கு, மேற்கு மற்றும் நீதிமன்றம் ஆகிய பகுதியில்
கிளைகள் உள்ளன. தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் கிழக்கு போஸ்ட்
ஆஃபீஸுக்கு வாடகை, ஊதியம் என 35 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஆனால், மாதம் 10
ஆயிரம் ரூபாய் கூட வருவாய் கிடைப்பதில்லை.வருவாய் குறைந்த போஸ்ட்
ஆஃபீஸ்களை மூட, தபால் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிழக்கு போஸ்ட்
ஆஃபீஸ் மூடப்பட்டு, தலைமை போஸ்ட் ஆஃபீஸுடன் இணைகிறது. மனுதாரர்கள் எங்கள்
கோரிக்கையை ஏற்று, ஒத்துழைப்பதாக தெரிவித்ததால், தொடர்ந்து அதேபகுதியில்
இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.