பள்ளி முடிந்து வீடு சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு
காங்கேயம், வெள்ளகோவில், உப்புபாளையம் ரோட்டை சேர்ந்தவர் கலாதேவி, 51; எட்டு ஆண்டுகளாக கரூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். பஸ்ஸில் கரூர் சென்று விட்டு மாலையில் நடந்து வீட்டுக்கு செல்வார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வெள்ளகோவில் வந்து, குமாரவலசு என்ற இடத்தில் நடந்து சென்றார். அப்போது வந்த அடையாளம் தெரியாத, 35 வயது மதிக்கத்தக்க ஆசாமி, கலாதேவி அணிந்திருந்த, ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றான். அவர் நகையை இறுக பற்றிக் கொண்டதால், ஒரு பகுதி மட்டும் கொள்ளையன் வசம் செல்ல, ஆசாமி ஓட்டம் பிடித்தான். இதுகுறித்த புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.