அரவக்குறிச்சியில் முருங்கை விலை வீழ்ச்சி
அரவக்குறிச்சி::கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தபடியாக, முருங்கை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை உற்பத்தி செய்யப்படுகிறது. அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி நடந்து வருகிறது.முருங்கை விதை மூலம் உற்பத்தி செய்யும்போது, அதன் பருவகாலம் ஒன்றரை ஆண்டுகளாகும். முருங்கை கன்று வாங்கி விதைத்தால், ஏழு மாதத்தில் பயன் தர துவங்கும். கன்று ஒன்று சந்தையில் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில், முருங்கை காய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் கிலோ, 300 ரூபாய்-க்கு மேல் விலைபோனது.இந்நிலையில், மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கி உள்ளது. தற்போது 1 கிலோ, 20 முதல் 30 ரூபாய் வரை விலை போகிறது. ஜனவரி, டிசம்பர் மாதங்களை தவிர, மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் முருங்கை மார்க்கெட் கமிஷன் மண்டிகளில் விற்பனை செய்கின்றனர்.அங்கு விவசாயிகளிடமிருந்து வாங்கிய முருங்கை காய்கள் பெங்களூரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் கொண்டு அனுப்பி வருகின்றனர். தற்போது முருங்கை சீசன் தொடங்கியுள்ளதாலும், காய்கள் வரத்து அதிகரித்ததாலும் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர். முருங்கை விவசாயத்தையே நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சோகத்துடன் தெரிவித்தனர்.அதேபோல் முருங்கை விதை கிலோ, 600 ரூபாய் வரை விக்கப்பட்ட நிலையில், தற்போது, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் கூலி ஆட்களுக்கு கூட, கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.