ஈரோடு : வேலை வாங்கி தருவதாக கூறி, 2.20 கோடி ரூபாய் மோசடி செய்து, கைதான கோவையை சேர்ந்த முதியவரை, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கோவை, வடவள்ளி நவாவூர் பிரிவு வெள்ளியங்கிரி நகர் நான்காவது வீதியை சேர்ந்தவர் தங்கவேல், 79. இவர், கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வெள்ளோட்டை சேர்ந்த, 44 பேரிடம் இரண்டு கோடியே, 20 லட்சம் ரூபாயை, 2021 ஆக., முதல் 2023 ஜூலை 24 வரை பெற்றுள்ளார். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை.இது குறித்து, ஈரோடு கவுண்டச்சிபாளையம் பாப்பா இல்லத்தை சேர்ந்த ராமசுவாமி, 82, என்பவர் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், வடவள்ளி பகுதியில் வேலை வாங்கி தருவதாக கூறி, 29 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்தது குறித்து, ஏற்கனவே தங்கவேல் மீது, வடவள்ளி போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்திருந்தனர். 2.20 கோடி மோசடி செய்தது தொடர்பாக கைது நடவடிக்கை குறித்து மே 31ல், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தங்கவேலுவிடம் தெரிவித்தனர். பின், தங்கவேலுவை நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த, 18ல் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.போலீசார் கூறுகையில்,' தங்கவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. சினிமா எடுப்பதற்காக பணம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.அவர் தன்னிடம் அசையும், அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை. வங்கி கணக்கிலும் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து சொத்துக்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை,' என்றனர்.