ஆணவ கொலைகளுக்கு தனி சட்டம் சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க., மனு
புதுடில்லி, ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் உருவாக்க வலியுறுத்தி தமிழக வெற்றிக்கழகத்தின் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து, தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுதும் தொடர்ச்சியாக ஆணவ படுகொலைகள் நடக்கின்றன. தமிழகத்திலும் அதிகரித்துள்ளன. தற்போதைய சட்டங்களால் இதை உறுதியாக தடுக்க முடியவில்லை. எனவே, ஆணவ படுகொலையை தடுக்கும் வகையில் தனியாக சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்கவும், அது தொடர்பான வழக்குகளை விசாரிக்கவும் விரைந்து முடிக்கவும் உரிய அறிவுறுத்தல்களை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்தும் அது முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே ஆணவ படுகொலைகளை தடுக்க தனியாக சட்டம் இயற்ற உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.