சத்தியமங்கலம்ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலையின் மேற்கு பகுதி எல்லையாக, மாக்கம்பாளையம் மலை கிராமமும், கிழக்குப்பகுதி எல்லையாக குன்றி மலை கிராமமும் உள்ளது. இதில் மாக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து, 60 மாணவ-மாணவியர், கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு வகுப்புகளில் படிக்கின்றனர். மலை கிராமத்துக்கு சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. கடம்பூரில் இருந்து 24 கி.மீ., துாரத்தில் மாக்கம்பாளையம் உள்ளது. இதில் பாதி துாரம் மட்டுமே தார்ச்சாலை; மீதி துாரத்துக்கு மண் ரோடுதான். காலையில் பள்ளி செல்லும் நேரத்துக்கு, 8:00 மணிக்கு பஸ் வருகிறது. மாலையில் பள்ளி முடிந்து, 5:45 மணிக்கு கடம்பூரில் புறப்படும் அரசு பஸ்தான் இவர்களுக்கு பிரதானமாக உள்ளது. மலை கிராமம் என்பதால் பஸ்சில் எப்போதும் கூட்டமாகத்தான் இருக்கும். எல்லா நாளுமே நெருக்கி நின்றபடிதான் பள்ளிக்கு வந்தும், திரும்பியும் செல்கின்றனர். மழை காலங்களில் பயணிக்கும் நேரம் மேலும் கூடுதலாகி, சிரமத்தை அதிகரிக்கும்.இதே நிலைதான் குன்றி மலை கிராமத்துக்கும் உள்ளது. கடம்பூரில் இருந்து குன்றி மலை கிராமம், 15 கி.மீ., துாரத்தில் உள்ளது. இப்பகுதிக்கு செல்லும் சாலை, 90 சதவீதம் நன்றாக உள்ளது. பள்ளி நேரத்துக்கு பஸ் வராவிட்டால், பிக்-அப் வேன்களில், ஒருவருக்கு, 100 ரூபாய் கொடுத்து பள்ளிக்கு வந்து செல்லும் நிலை ஏற்படும். இதன் காரணமாகவே ஏழை குழந்தைகள் பலர், படிப்பை பாதியில் நிறுத்தி கொள்கின்றனர்.கடந்த மாதம் பழங்குடியினர் நலத்துறை மூலம் நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு வேன் வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்துக்கு பர்கூர், தாளவாடிக்கு தலா ஒரு வேன் வழங்கப்பட்டது. இதேபோல் குன்றி, மாக்கம்பாளையம் கிராமத்துக்கு தலா ஒரு வேன் வழங்கப்பட்டால், இப்பகுதி மாணவ-மாணவியர், தடையின்றி பள்ளி வந்து செல்லும் நிலை ஏற்படும். பஸ்களிலும் நெரிசல் குறையும்; கிராம மக்கள் நிம்மதியாக பயணம் செய்வர் என்பது, மலை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது