| ADDED : மார் 25, 2024 04:47 AM
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே புறவழிச்சாலையில் மினி சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில், தி.மு.க., கூட்டத்திற்கு சென்ற 38 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தனது காரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மலையரசனை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க, கொட்டையூர் காலனி பகுதியைச் சேர்ந்த 2 ஆண்கள், 36 பெண்கள் என, 38 பேர், மினி சரக்கு வேனில் கள்ளக்குறிச்சி வந்தனர்.அதே பகுதியைச் சேர்ந்த ராஜி, 29; என்பவர் வேனை ஓட்டினார். காலை 10:30 மணியளவில் சேலம் - உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதுமாம்பட்டு பிரிவுசாலை அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில், கலியன் மனைவி மலர், 65; தங்கராஜ் மனைவி குப்பாயி, 60; ராமலிங்கம் மனைவி நீலாம்பு, 50; குமார் மனைவி சசிகலா, 32; உட்பட 38 பேர் காயமடைந்தனர்.அப்போது, அந்த வழியாக வந்த கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார், காயமடைந்த பலரை தனது காரில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மற்றவர்களை 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.