கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில், 18ம் தேதி விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்ட 229 பேர், அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், 65 பேர் இறந்தனர்; 157 பேர் குணமடைந்தனர். ஏழு பேர் சேலம் அரசு மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சிவராமன், 42, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால், கள்ளச்சாராய குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை, 66 ஆக உயர்ந்துள்ளது.சி.பி.சி.ஐ.டி., மனு:இதுவரை, 22 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கருணாபுரத்தைச் சேர்ந்த கண்ணுகுட்டி கோவிந்தராஜிடம் நடத்திய விசாரணையில், இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம், 40, முருகேசன், 48, ஆகியோர் மெத்தனால் கலந்த சாராயத்தை வாங்கி விற்பனை செய்ததும், இருவரும் சம்பவத்திற்கு பின், சாராயம் விற்ற வழக்கில் கள்ளக்குறிச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் அடைத்திருப்பதும் தெரிய வந்தது.அவர்கள் இருவரையும் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்ய அனுமதி வேண்டி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று, கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.