| ADDED : ஜூன் 01, 2024 06:00 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காந்திரோட்டில் உள்ள சுயம்பு சக்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா கோவில்களை அகற்ற உள்ளதாக நீர்வளத்துறை சார்பில் நேற்று 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது.கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியில் இருந்து, காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து 36 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.கடந்த 2020ம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்ற தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்ததால் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற தடை கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து, 8 வாரத்திற்குள் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை (நீர்வளம்) சார்பில் கடந்த மே 16ம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது.தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தாமாகவே கட்டடங்களை இடித்து அகற்றி வருகின்றனர்.கடந்த 28ம் தேதி பொதுப்பணித்துறை சார்பில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஒரு டீக்கடை, 2 மருந்து கடைகள் இடித்து அகற்றப்பட்டது.இந்நிலையில், காந்திரோட்டில் உள்ள சக்திவிநாயகர் மற்றும் தர்மசாஸ்தா கோவில்கள் இன்று 1ம் தேதி அகற்றப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் நேற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.கோவில் அகற்றுவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என கூறி கோவில் நிர்வாகத்தினர் வாக்குவாதம் செய்ததால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.