| ADDED : பிப் 13, 2024 06:13 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் மாவட்ட நுாலக கட்டடம் கட்ட நகரப்பகுதியில் இடம் இல்லாததால், 6 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்தும் 3 ஆண்டுகள் கடந்தும் பணிகள் துவங்கப்படாத அவலம் உள்ளது.கள்ளக்குறிச்சியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் தனியார் கட்டடத்தில் நுாலகம் துவங்கப்பட்டது. இன்று வரை சொந்த கட்டடம் இல்லாததால் தொடர்ந்து வடாகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள், 500க்கும் மேற்பட்ட புரவலர்கள் பயனாளர்களாக உள்ள இந்த நுாலகம் கட்டுவதற்கு அரசு மகளிர் பள்ளி அருகே 15 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதனை முறையாக பயன்படுத்தப்படாமல் விடப்பட்டது.ஆனால் கடந்த 2019ம் ஆண்டில் புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்டம் உட்பட 6 மாவட்டங்களுக்கு 3 தளங்கள், லிப்ட் வசதியுடன் மாவட்ட மைய நுாலகம், மாவட்ட நுாலக தலைமை அலுவலகம் ஏற்படுத்த, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதற்கான எந்த ஒரு பணியும் இதுவரை துவங்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட 6 கோடி ரூபாய் நிதியும் எங்கே இருக்கிறது என தெரியவில்லை. கள்ளக்குறிச்சி நகர பகுதியில் இதற்கான 35 சென்ட் இடம் இருந்தால் மட்டுமே மாவட்ட நுாலகம் கட்டும் பணிகள் துவங்க முடியும் என்ற நிலையில் போதிய இட வசதி இல்லை. ஆனால், இதனை முறையாக அறிவிக்காமல், மாவட்ட நிர்வாகம் சார்பில் அவ்வப்போது கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம், தாலுகா அலுவலக வளாகம் போன்ற இடங்களில் நுாலகத்திற்கு இடம் எடுப்பது போன்று வெற்று பாவனைகள் காட்டப்பட்டு வருகின்றது.கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரமாகி 4 ஆண்டுகள் முழுமையாக கடந்த நிலையில், மாவட்ட அலுவலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட வீரசோழபுரம் பகுதி தியாகதுருகத்தை ஒட்டி உள்ளது. அதேபோன்று, பொதுப்பணித்துறையின் தங்கும் விடுதி, பொதுப்பணித்துறையின் மாவட்ட அலுவலகமும் தியாகதுருகம் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து நகர பகுதியில் இடம் இல்லாமல் நீடித்து வரும் நுாலக கட்டட பணிகளும் தியாகதுருகத்தை நோக்கியே செல்லும் நிலையை ஏற்படுத்தாமல் கள்ளக்குறிச்சி நகர பகுதியிலேயே மாவட்ட நுாலகத்தை அமைத்திட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.அரை நுாற்றுாண்டுக்கு மேலாக கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நுாலக கனவு கானல் நீராகவே நீடித்து வருகிறது. எனவே கள்ளக்குறிச்சியில் நுாலகம் கட்டுவதற்கு தேவையான பணிகளை நுாலகத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து துவங்கிட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.