வெளிநாட்டில் இறந்த கணவன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரி மனு
கள்ளக்குறிச்சி: வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த லா.கூடலுார் கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி வசந்தி, 35; தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் டி.ஆர்.ஓ., ஜீவாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; எனது கணவர் முருகன் கடந்த 2 ஆண்டுகளாக, மஸ்கட் நாட்டில் டிரைவராக பணிபுரிந்தார். கடந்த 30ம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கணவர் முருகன் இறந்ததால் வருமானமின்றி எனது குடும்பம் மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, இறந்த கணவன் முருகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், முருகன் பணி செய்த நிறுவனத்தில் இருந்தும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்தும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.