தென் பெண்ணையாற்றின் படித்துறையை மீட்க கோரிக்கை
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், தென்பெண்ணை ஆற்றின் படித்துறையை மீட்டெடுத்து, புனிதத்தை காக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கோவிலுார், ஆற்றங்கரை நாகரீகத்திற்கு எடுத்துக்காட்டான பழமையான நகரம். நகரின் வடக்கே வற்றாத ஜீவ நதியான தென்பெண்ணை பாய்ந்து ஓடுகிறது. பக்தர்களும், பொதுமக்களும் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு வசதியாக பஸ் நிலையம் எதிரில் உள்ள ஆற்றின் கரையில் படித்துறை அமைக்கப்பட்டிருந்தது. தைத்திங்கள் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில், உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெறும் வைபவங்களில் பெருமாள் இந்த படித்துறையின் வழியாக எழுந்தருளி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். ஆனால், இன்று படித்துறை இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் குப்பைகள் கொட்டப்பட்டு ஆற்றை பட்டா நிலம் போல் மாற்றி, வேலி போட்டு பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் பன்றி வளர்ப்பது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் கொட்டிய மண் சேறும் சகதியுமாகி, பன்றிகள் உலாவும் அசுத்தம் நிறைந்த பகுதியாக தென்பெண்ணையாறு உள்ளது. பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி படித்துறையை வெளிக் கொண்டு வந்து ஆற்றின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.