உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, சாத்தணஞ்சேரி கிராமம். பாலாற்றங்கரை அருகே உள்ள இக்கிராமத்தை சுற்றி முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள், எப்போதும் பசுமை போர்த்தி காட்சி யளிக்கிறது.நெல், வேர்க்கடலை, வாழை, சோளம் மற்றும் தோட்டப் பயிர்கள் என, எந்த வகை பயிரிட்டாலும் செழிமையாக வளரக்கூடிய மண் வளம் கொண்ட பூமியாக சாத்தணஞ்சேரி விளங்குகிறது. எனினும், இப்பகுதி விவசாயிகள் கரும்பு பயிரிடுதலை முதன்மையாக கொண்டுள்ளனர். மதுராந்தகம் அடுத்த படாளத்தில் இயங்கும்கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, ஆண்டு தோறும் அரவைக்கு, சாத்தணஞ்சேரி பகுதியில்இருந்து கணிசமானஅளவுக்கு விவசாயிகள் கரும்புகளை அனுப்பிவருகின்றனர்.தற்போது, சுற்றுவட்டார கிராமங்களில், கரும்பு விளைச்சல் குறைந்து வரும் நிலையில், சாத்தணஞ்சேரி பகுதியில் மட்டும் 700 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:மண் வளம் காரணமாக கரும்புகள் அதிக எடையுடன் நல்ல மகசூல் தருகிறது. தற்போது, கரும்பு விவசாயத்தில் கட்டுப்படியாகாத விலை, வெட்டுக்கூலி அதிகரிப்பு போன்ற பல பிரச்னைகள் இருந்தாலும் கூட, வழக்கம்போல கரும்பு சாகுபடி தொடர்ந்து மேற்கொள்கிறோம்.இந்நிலையில், இப்பகுதிக்கான ஏரி, சில ஆண்டுகளாக நீர்வரத்து இன்றி நிரம்பாமல் உள்ளது. இதனால், சுற்றிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.எனவே, இப்பகுதியில் தொடர்ந்து கரும்பு சாகுபடி மேற்கொள்ள வசதியாக, இப்பகுதி ஏரிக்கான பாலாற்று நீர்வரத்து கால்வாய் பராமரித்து, மழைக்காலத்தில் ஏரிக்கு தண்ணீர் வந்தடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.